வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி பட்டாசு கடையில் நூதன மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி..!

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் சர்க்கார் பட்டாசு கடை என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் வாசு என்கிற நாகராஜன் நேற்று இரவு 10 .15 மணி அளவில் மாருதி ஸ்விப்ட் வெள்ளை நிற காரில் வருமான வரித்துறை போர்டுடன் கார் வந்தது. அதிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் கடைக்கு வந்து தன்னை வருமான வரித்துறை அதிகாரி என கூறி,பட்டாசு ரூபாய் 60 ஆயிரத்திற்கு வாங்கி பார்சல் செய்து காரில் ஏற்ற கூறினார். கடையில் இருந்தவர்கள் பட்டாசு பார்சலை வேகமாக ஏற்றி காரில் வைத்தனர்.
பிறகு ஜி பேயில் பணம் அனுப்புவது போல் நடித்து, இரண்டு மூன்று முறை முயற்சித்து பின்னர் பணம் அனுப்ப முடியவில்லை. சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி, தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் 7ஆயிரத்து 500 எண்ணினார். பிறகு பணம் குறைகிறது , மீதி பணத்தை காரில் இருந்து எடுத்து வந்து தருகிறேன் எனக் கூறி காரில் ஏறியவர் அங்கிருந்து சிட்டாக காரில் பறந்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் கத்திக்கொண்டே ஓடினர். ஆனால் கார் நிறுத்தவில்லை.
இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் வாசு புகார் செய்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ஏமாற்றி சென்ற டிப் டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.