அரசியலுக்கு அரிச்சுவடியே தெரியாதவர்கள்... நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் முதல்வர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்..!

சென்னையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது தலைமையிலான திமுக அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், தமிழகத்தில் திமுக ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும், பிற மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு வழிகாட்டியாகவும் திமுகவின் ஆட்சி திகழ்வதாக அவர் பெருமிதம் கொண்டார்.
அரசியல் அனுபவமற்ற சிலர், தாங்களே அடுத்த முதலமைச்சர் என்று கூறுவது குறித்து விமர்சித்த ஸ்டாலின், "நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கின்றனர். அரசியலுக்கு அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலைதான் உள்ளது" என்று கூறினார்.
இருப்பினும், இந்த விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறிய ஸ்டாலின், தமது கடமையை சரியாகச் செய்து வருவதாகவும், மக்கள் தங்களை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சியாகவும், பிற மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்வதாக குறிப்பிட்டார்.
"இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது, அழிக்க முடியாது, அகற்ற முடியாது. அதுதான் திமுக ஆட்சி" என்று அவர் உறுதியளித்தார்.