கமல்ஹாசன் யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தாரோ அவர்கள் வாக்களித்து தான் : அண்ணாமலை விமர்சனம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5883d697d128bf81cb881f3d8ab80ecd.png?width=836&height=470&resizemode=4)
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் மநீம போட்டியிடாது”, என பேசினார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுவை என 40 தொகுதிகளில் திமுகவிற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டிருப்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை பதிலளித்திருப்பதாவது,
“தேர்தல் களத்தில் இருக்கிறோம். எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிப்பு வரலாம். தேர்தல் களத்தில் உண்மை முகங்கள் வெளியே வருகிறது. மக்கம் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் இணைந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவை என 40 தொகுதிகளிலும் திமுகவுக்கு மநீம சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 2025 மாநிலங்களவை தேர்தலில் மநீம-க்கு ஒரு சீட் வழங்கப்படும். நான் கமல்ஹாசன் மீது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தப் போவதில்லை. தமிழ்நாட்டில் தனித்து ஒரு கட்சியை நடத்துவது எவ்வளவு கடினம், அதுவும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் ஒரு கட்சி மாற்றமாக இருக்க முடியும் என பேசினால் எவ்வளவு கடினம் என்பதன் எடுத்துக்காட்டு தான் கமல்ஹாசன் திமுகவுடன் இணைந்திருப்பது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தாரோ, அவர்கள் வாக்களித்து தான் 2025-ல் மாநிலங்களவை எம்.பி.ஆக வேண்டி உள்ளது.
இடது, வலது, மையம் என மூன்று புள்ளிகளை இணைகக் கூடிய ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. அரசியலில் மாற்றத்தை விரும்புவோர் பாஜக பக்கம் தான் வரவேண்டும்”, இவ்வாறு அண்ணாமலை பேசினார்.