தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (சனிக்கிழமை) தமிழகத்திற்கு வருகை தந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளைய்ம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.