இதனால் தான் யூடியூபர் இர்பான் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/36dc9079f08ce24c2aa6dbf84b336f24.webp?width=836&height=470&resizemode=4)
பிரபல யூடியூபரான இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வெளிநாடுக்கு சென்றிருந்த இர்பான், அங்குள்ள மருத்துவமனையில் தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்தார். அத்துடன் விடாமல், தனது குழந்தையின் பாலினத்தை (பெண்) வெளிப்படையாகவும் அறிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை, சிசுவின் பாலினத்தை கண்டறிவதும், அதனை அறிவிப்பதும் கடும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில், சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று இர்பான் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "என்னங்க நீங்க பேசுறீங்க.. அமைச்சர் உதயநிதிக்கு இர்பான் எவ்வளவு க்ளோஸ்னு நீங்க யூடியூபில் பார்க்கலையா? அவங்களோட நண்பர்கள், அவங்களோட குடும்பத்தினர், அவங்க கட்சிக்காரர்கள் என்ன தவறு செய்தாலும் எந்த சட்டமும் பாயாது. இதுவே நீங்களோ நானோ இப்படி செய்திருந்தால் உடனே அரெஸ்ட்டு, ஜெயிலு தான். பெயிலும் கிடையாது. அதுமட்டும் கிடையாது.. குண்டாஸும் உண்டு. அவங்களை எதிர்த்தால் இதுதான் நடக்கும்" என அவர் கூறினார்.