1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர்கள் நீக்கத்திற்கு இது தான் காரணம் : ஒரே போடாக போட்ட தமிழிசை..!

1

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கின் காரணமாக செந்தில் பாலாஜியும், பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடியும் ராஜினாமா செய்துள்ளனர்.


செந்தில் பாலாஜி, பொன்முடி வகித்த துறைகள் எஸ்.எஸ்.சிவசங்கர், சு.முத்துசாமி, ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மறுபடியும் பால்வளத் துறை பொறுப்பே வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு அமைச்சர்கள் இருண்ட ஆட்சியின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பொன்முடி, மற்றொருவர் செந்தில் பாலாஜி. இவர்கள் இருவரும் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.


ஒருவர் பெண்களுக்கு எதிரான துறையாக கருதப்படும் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததனால் நீக்கப்பட்டார். மற்றொருவர் பெண்களுக்கு எதிராக முறைகேடாக பேசியதால் நீக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் செவி சாய்க்காமல் இருந்தார். இன்று நீதிமன்றத்தின் கட்டாயத்தின் பேரிலும் மக்கள் மன்றத்தின் கட்டாயத்தின் பெயரிலும இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து, “தவறு செய்தவர்களை இனிமேலும் தொடர முடியாது என்ற நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். இனிமேல் பொறுக்க முடியாது என்ற சூழ்நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே தவிர இல்லை என்றால் பொறுத்து போயிருப்பார்கள். ஆக இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். 2026 திமுகவிற்கு எதிராக பதில் சொல்வார்கள்” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் தமிழிசை.

அதே சமயம் இது முதல்வராக எடுத்த நடவடிக்கை என்றும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like