வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் இது தான் - சத்யபிரதா சாகு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5287b6402e2997714208da598e5fe6c4.webp?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. முந்தைய தேர்தல்களில், தொகுதி வாரியாகவும், சராசரியாகவும் வாக்குப்பதிவு நிலவரம் இரவு 9 மணிக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும். இதற்குமுன்பு, ஒவ்வொரு 2 மணி நேரத்துக்குமான வாக்குப்பதிவு சதவீதமும் வழங்கப்படும்.
மறுநாளில், விடுபட்டதையும் சேர்த்து இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிடுவார். இதில், வாக்குப்பதிவு அன்று இரவு வெளியிட்டதைவிட மறுநாள் வெளியிடப்படும் வாக்குப்பதிவு சதவீதம் பெரும்பாலும் 2 சதவீதம் அதிகரிப்பதை பார்க்க முடியும்.
இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்படி, தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதில், வழக்கமாக குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை மாவட்டத்தின் மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மறுநாள் இதை ஒட்டியே வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தேர்தல்ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தகவலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 69.46 சதவீதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் கடந்த 2019 மக்களவை தேர்தலைவிடவும் வாக்கு சதவீதம் குறைந்திருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து 44 மணி நேரம் கழித்தே,இறுதி வாக்குப்பதிவு நிலவரம்69.72 சதவீதம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான தரவுகளை பதிவு செய்வது மற்றும் இதற்கான செயலியில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களே இந்த குழப்பம், தாமதத்துக்கு காரணமாக இருக்கும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்போன் பயன்பாடு, செயலி ஆகியவை அமலுக்கு வருவதற்கு முன்பு, வாக்குச்சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, பதிவான வாக்கு விவரத்தை மண்டல அதிகாரி சேகரித்து, சட்டப்பேரவை தொகுதிக்கான பொறுப்பு அலுவலரிடம் வழங்குவார். பின்னர், மக்களவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தரவு தொகுக்கப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.
அதேநேரம், செல்போன் பயன்பாடு வந்தபிறகு, அதில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பரிமாறப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், வாக்குப்பதிவு நிலவரத்துக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அப்போதும் இதுபோன்ற பிரச்சினை ஏதும் எழவில்லை. ஆனால் இந்த முறை, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்த போது, "செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது .
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்" என்றார்.
▪️ செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது.
▪️ செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை.
▪️ ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.
▪️ தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்.
▪️ அனைத்து தொகுதிகளிலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தயாரிக்கப்பட்டு தோராயமாக வெளியிடப்பட்டது’’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.