இது என்னுடைய முடிவு அல்ல... தொண்டர்களின் முடிவு : எடப்பாடி பழனிசாமி..!

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி முறிந்தது. இனி என்றைக்கும் கூட்டணி இல்லை என்று சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்தார். அதற்கு முதல் நாள் கூட இதே கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் கூறியிருந்தார். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி வாய் திறக்கவில்லை என்று சிலர் கருத்து கூறி இருந்தனர். அந்த கருத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த விஷயத்தில் தனது மவுனத்தை கலைத்து கூட்டணி முறிவு பற்றி அவர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இது குறித்து சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும்.தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க.வினர் முன்னெடுப்பர். மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறி விட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றினோம். ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து வரும் 6-ம் தேதி டெல்டா மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.