குளம்போல் மழைநீர் தேங்கிய திருமழிசை சந்தை.. ஒருநாள் மழைக்கே இந்த கதியா? வியாபாரிகள் அவதி..
திருமழிசை காய்கறிகள் சந்தையில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேடு காய்கறிகள் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து சென்னை பூந்தமல்லி அடுத்துள்ளள திருமழிசை துணை நகரத்தில் காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
காய்கறி சந்தைக்கான முறையான இடம், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என ஆரம்பத்தில் இருந்த வியாபாரிகள் கூறி வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு பெய்த கன மழை காரணமாக காய்கறி சந்தை முழுவதும் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. கடைகள் உள்ளே மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
இதனால் லாரிகளில் வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை எங்கு இறக்கி விற்பனை செய்வது என்பது தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே சேமிப்பு கிடங்கு இல்லாமல் காய்கறிகள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும் தற்போது மழைக் காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்பது தெரியாமல் திணறி வருவதாகவும் வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் உடனடியாக மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
newstm.in