திடீரென மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி..! என்ன ஆச்சு?
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பரப்புரை முடிந்த பிறகு பெங்களூருவிலும் காங்கிரஸூக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார் விசிக தலைவர் திருமாவளவன்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்தபடி காணொலி வாயிலாக பேசிய திருமாவளவன், “ஏப்ரல் மாதம் சிதம்பரம் தொகுதியிலும் நம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டேன். காலை 8 மணிக்கு பரப்புரை ஆரம்பித்தால் இரவு 10 மணிக்குதான் முடியும். ஒருநாளைக்கு 14 மணி நேரம் வரை நின்றபடியே வாக்கு சேகரித்ததால் இரண்டு கால்களும் வீங்கிப் போய் பெரும் இன்னலுக்கு ஆளானேன். அந்த வலியோடுதான் பரப்புரை மேற்கொண்டேன்.
கர்நாடகாவில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் காங்கிரஸுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தகவலை கர்நாடகா காங்கிரஸ் சார்பில் எடுத்துரைத்தனர். அதன்பிறகு உடனே கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறி பரப்புரை மேற்கொண்டேன். அங்கிருந்து தெலங்கானாவில் பரப்புரை மேற்கொண்டு சென்னை திரும்பினேன்.
தற்போது சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு வந்திருக்கிறேன். கால்களில் ஓரளவுக்கு வீக்கம் வடிருந்திருக்கிறது. கால்கள் வீங்கும்போது எல்லாம் மருந்து எடுத்து அதனை சரி செய்ததில்லை. இப்போது உறங்குவதற்கு சிறிது நேரம் கிடைத்துள்ளது. எனினும், தொடர்ச்சியான அலைச்சல் காரணமாக உறக்கம் இல்லை. இதனால் ஒரு வாரம் காலம் ஓய்வெடுக்க உள்ளேன். இன்னும் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் வீக்கம் முற்றாக வடிந்துவிடும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “மே 25ஆம் தேதி சென்னையில் விசிகவின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவுக்கு அனைத்துப் பொறுப்பாளர்களும் கட்டாயம் வர வேண்டும். மாலை 3 மணிக்கே அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு வந்துவிட வேண்டும். 4 மணிக்கு விழாவைத் தொடங்கினால் தான் 9 மணிக்கு முடிக்க முடியும். ஆகவே, 6 மணிக்கு ஆரம்பிக்கும் என தாமதமாக வர வேண்டாம்” என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்