ஆளுநர் என்பதை மறந்து ஆர்.என்.ரவி அரசியல் வாதி போல செயல்படுகிறார் : திருமாவளவன் குற்றச்சாட்டு..!

ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கெடுக்கவில்லை.
இதுதொடர்பாக ஆளுநர் “துணை வேந்தர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. இதற்காக காவல் துறையை பயன்படுத்தியுள்ளார். ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா?” என்றெல்லாம் விமர்சனம் முன்வைத்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டு மக்களிடையே அவதூறுகளை பரப்புகிறார். திமுக அரசுக்கு எதிரான மனநிலையை கட்டமைக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் நலன்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என்பதைப் போலவும், தனக்கே அக்கறை உள்ளதைப் போலவும் தோற்றத்தை உருவாக்க ஆளுநர் முயல்கிறார்.
ஆளுநர் என்பதை மறந்து ஒரு அரசியல்வாதியை போல் செயல்படுகிறார். ஆகவே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “போர் வேண்டாம் என்பதுதான் எங்களின் கருத்து. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை மத அடிப்படையிலானதாக மாற்றுவதற்கு, இந்து - முஸ்லீம் என்பதன் அடிப்படையில் மாற்றுவதற்கு திட்டமிடுகிறார்கள். ஜம்மு காஷ்மீரை யார் ஆள்வது என்ற முரண்பாடு அது இந்தியாவில் இணைந்தபோதில் இருந்தே உள்ளது. அதன் பக்க விளைவுகளாவே காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.
ஆனால், பாஜக மத அடிப்படையில் இந்த பிரச்னையை சித்தரிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கான நாடு, இந்தியா இந்துக்களுக்கான நாடு என்ற விவாதத்தை உருவாக்க முயல்கிறது. இது ஆபத்தான அரசியல். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றால் அப்பாவி பொதுமக்கள் தான் அதனால் பாதிக்கப்படுவார்கள். உலக அரங்கில் இந்தியாவுக்கான நன்மதிப்பு பாழாகும். ஆகவே, போர் தேவையில்லை” என்று தெரிவித்தார்.