1. Home
  2. தமிழ்நாடு

நம்மைத் தேடி வந்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்குறாங்க.. வாங்கலாமா வேண்டாமா?

1

உண்மையில் இப்படி நம்மைத் தேடி வரும் கடன் தருவதாகக் கூறுவதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உங்களுடைய சுயவிவரத்தை வைத்து நடைபெறும் ஒரு செயல்முறையாகும். நீங்கள் எங்காவது ஏடிஎம் கார்டை அல்லது கிரெடிட் கார்டை ஸ்வைப் பண்ணும்போதும், பணம் செலுத்தும்போதும், சம்பளம் வாங்கும்போதும் அல்லது ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்கும்போதும் உங்களுடைய சுயவிவரம் பதிவு செய்யப்படும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் ஆகிய அனைத்தும் உங்களுடைய சுய விவரத்தைக் கையாளத் தொடங்குவார்கள்.

உங்களுக்கு நல்ல சம்பளம் அல்லது வருமானம் இருந்தாலோ, சரியாக EMI செலுத்தி வந்தாலோ, கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தாலோ நீங்கள் ஒரு முக்கியமான வாடிக்கையாளராக அவர்களுக்குத் தெரிவீர்கள். கடன் கொடுக்கும் எந்த நிறுவனத்துக்கும் நீங்க ரிஸ்க் இல்லாத நபராகத் தெரிவீர்கள். உடனே உங்களுக்கு "pre-approved" கடன் தருகிறோம் என்று தேடி வந்து கூறுவார்கள். உங்களுக்கு இப்போது கடன் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படித் தேடி வந்து சுலபமாக கடன் தருவதாகக் கூறினால் நீங்கள் வேண்டாம் என்று கூற மாட்டீர்கள் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. ஒரு காலத்தில் வங்கிக்கு தேடிப் போய் அலைந்து திரிந்து நாம் கடன் வாங்குவோம். ஆனால் அவர்கள் இப்போது தேடி வந்து கடன் கொடுக்கிறார்கள்.

உங்களுக்கு வரும் மெசேஜில் "Pre-approved", "Zero paperwork", "Instant transfer" போன்ற வார்த்தைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இவை அனைத்தும் உங்களுடைய ஆசையைத் தூண்டும் வார்த்தனைகளாக இருக்கும். இது உங்களுடைய தயக்கத்தை குறைக்கும். கடன் வாங்குவதை சாதாரணமாக்கிவிடும். நீங்கள் கடன் வாங்க முடிவு செய்யாமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு 5 லட்சம் மிக எளிதாகத் தருகிறோன் என்று கூறினால் ஆசை வரத்தானே செய்யும். ஏனெனில், அனைவருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் பண நெருக்கடியோ அல்லது எதிர்காலத் திட்டங்களோ இருக்கும். அதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.

கடன் கொடுக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்களின் தரப்பில் இருந்து பார்த்தால் இது நியாயமான ஒன்றுதான். ஏனெனில் அது நிறைய பேரை கடன் வாங்க வைக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுடைய மாதாந்திர இலக்கைப் பூர்த்தி செய்யும். ரிஸ்க் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு தேடி வந்து கடன் கொடுத்து அவர்கள் தங்களுடைய தொழிலை வளர்த்துக் கொள்வார்கள். வாடிக்கையாளர்களாக நம்முடைய தரப்பில் இருந்து பார்த்தால் இதுவொரு தவறான எண்ணத்தை கொடுக்கும். அவர்கள் ஏன் தேடி வந்து நமக்கு கடன் கொடுக்கிறார்கள் என்று யோசிப்போம்.

இதுபோல நம்மைத் தேடி வந்து கடன் கொடுப்பது மோசடி வேலை என்று கூறிவிட முடியாது. உண்மையாகவே அவர்கள் லட்சக்கணக்கில் கடன் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் கடன் வாங்க வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் முடிவு செய்யக் கூடாது. உண்மையான தேவை இருந்தால், கடனை உங்களால் சரியாக அடைக்க முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான ஆதாரமும் இருந்தால் நீங்கள் கடன் வாங்கலாம். ஆனால் சற்றும் யோசிக்காமல் கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டு அதை அடைக்க முடியாமல் கடன் வலையில் சிக்கி பாதிக்கப்படக் கூடாது. எனவே கடன் விஷயத்தில் சரியான ஆலோசனையும் திட்டமிடலும் தேவை.

Trending News

Latest News

You May Like