குட் நியூஸ்..!! டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது.. எஸ்.பி.ஐ விளக்கம்..!

ஏழை எளிய மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன், ஜன் தன் வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இது, 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் இந்தக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த தொகையையும் திரும்ப வழங்கி வருகிறது.
அரசின் உத்தரவின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் ரூ.90 கோடியை திரும்ப வழங்கிவிட்டது. ஆனால் இன்னும் ரூ.164 கோடி பாக்கி உள்ளது. அவற்றை வழங்கும் பணியில் அவ்வங்கி ஈடுபட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.
இதை அவ்வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என்று கூறியுள்ளது.