படிப்புக்கு வயதில்லை.! 70-வது வயதில் பிளஸ் டூ பாஸ்..!

+2ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ் நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற முதல் 5 மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.48% பெற்று 4ம் இடம் பிடித்தது.
பொதுவாக இது போன்ற பொது தேர்வு முடிவுகளில் பல சுவாரசியங்கள் இடம்பெறும். இந்த வரிசையில் கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி +2 தேர்வில் 346 மதிபெண்கள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யோகா, இயற்கை மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பலர் இந்த வயதில் ஓய்வு வாழ்க்கையை நோக்கி செல்லும் போது பள்ளிக்கல்வியை தன்னம்பிக்கையுடன் தொடங்கி, முதல் முயற்சியிலேயே 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ராணி பாட்டியின் கல்வி வேட்கைக்கும், முயற்சிக்கும் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக இவர் கருதப்படுகிறார். சட்டம் படிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. மதிப்பெண்கள் குறைவாக உள்ளதால், தற்போது யோகா பட்டப்படிப்பு செய்வதற்கான திட்டத்தில் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ள ராணியின் சாதனை, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் இருக்கிறது.