அதிமுக சார்பில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற வாய்ப்பு..!

விசைத்தறியாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாகவும், இந்தப் பிரச்சனை விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்படும் எனவும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி சட்டமன்றத்தில் உறுதியளித்தனர்.
இந்த நிலையில், விசைத்தறியாளர்கள் பிரச்சனை குறித்து கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக 2 தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் அவ்வாறு விரைந்து செய்யாவிட்டால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும், ஏப்ரல் 11 (வெள்ளி) முதல் 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
தாங்கள் கேட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், ஏப்ரல் 16ம் தேதி அன்று விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இதையடுத்து 2022ம் ஆண்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கிய கூலியில் இருந்து 7% உயர்த்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் விசைத்தறி உரிமையாளர்கள் கேட்டது 2022 கூலியில் இருந்து 30% உயர்வு எனவும், இப்போது உள்ள மின் கட்டணம், பணியாளர்களுக்கான கூலி, உற்பத்தி தொடர்பான செலவுகளை கணக்கில் கொண்டு 30% உயர்வை அவர்கள் கேட்டுள்ளதாகவும், 7% உயர்வு தங்களுக்கு பயனளிக்காது என்பதால் ஒரு நியாயமான கூலி உயர்வு உறுதிசெய்யப்படும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து, உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இப்போராட்டத்தால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000 க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு ரூ.60 கோடி வீதம், இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் வி.பி. கந்தசாமி மற்றும் பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் சோமனூரில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. கந்தசாமி, இந்த விஷயத்தில் கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையெனில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படும் என தெரிவித்தார்.