தியேட்டர்கள் திறப்பு, மின்சார ரயில் இயக்கம்? - முதலமைச்சரின் இன்றைய தளர்வுகள் அறிவிப்பில் இடம்பெற வாய்ப்பு !

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கிட்டதட்ட அனைத்தும் செயல்பட தொடங்கிய நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளன. இதனிடையே தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கொரோனா பரவலும் குறைந்து வருவதால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று மேலும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது. அதில் மின்சார ரயில்கள் இயக்கம், தியேட்டர்கள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in