பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்த இளைஞர்.. காதலிக்கு நடந்த கொடுமை !
டெல்லியைச் சேர்ந்த சுமித் தாமர்(27) என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் இளம் பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதனால், அவரை காதலித்து வந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். சுமித் தாமர் திருமணமான பின்னரும் காதலியை கைவிட மனமில்லை என கூறப்படுகிறது.
எனவே தான் காதலித்த பெண் புறக்கணித்ததை தாங்கிக்கொள்ள முடியாத தாமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஆலி விஹார் பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற தாமர் அப்பெண்ணை சுட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த குண்டு நல்வாய்ப்பாக அப்பெண் மீது படவில்லை. பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு திரண்ட நிலையில் சுமித் தாமர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இது குறித்து பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திருமணமாகிய பின்னரும் தன்னுடன் பேச வேண்டும் என 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால், அவரை கொலைசெய்யும் எண்ணத்தில் துப்பாக்கி வாங்கிவந்ததாக அவர் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
newstm.in