தொடரும் சோகம்..! முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கடந்த 11 ஆம் தேதியன்று தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட நபர்கள் திடீரென மயங்கி விழத் தொடங்கியதால், முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனைவருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதையடுத்து அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கர் கணேஷ் (48), முருகம்மாள் (45), அம்பிகா (40) ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் மறுநாள் காலை தனலட்சுமி (70) என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியதால் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரை மீட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள் குறிப்பிட்ட முதியோர் இல்லத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பகத்தில் உணவு அருந்திய அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.