தொடரும் சோகம்..! சென்னையை தொடர்ந்து கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b3442b1f129ae66f3f540f6a5f3c1adc.jpg?width=836&height=470&resizemode=4)
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5-ம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக நாய் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நாய் வளர்ப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது. எனினும் நாய்கடி சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவம், கோவை அருகே சூலூரில் சிறுமி ஒருவருக்கு நடந்துள்ளது.
கோவை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அக்ஷயா கீர்த்தி. 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தப்பி ஓடியுள்ளார். சிறுமி தவறி கீழே விழுந்து விட, அவர் மீது பாய்ந்த நாய் சிறுமியின் கழுத்து, தோள்பட்டை, காது என 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவ மனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.