1. Home
  2. தமிழ்நாடு

இவர்கள் மூவரும் சென்னைக்குள் நுழையத் தடை; போலீசார் உத்தரவு..!

1

 சென்னை காவல் ஆணையரகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகள் ராக்கெட் ராஜா, லெனின், நெடுங்குன்றம் சூர்யா ஆகியோர் சென்னைக்கு வர தடை விதித்து காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை, காவல் நிலைய விசாரணை போன்றவற்றுக்கு மட்டுமே இவர்கள் மூன்று பேரும் சென்னைக்கு வரலாம் என்றும், மற்ற எந்த விதமான காரணங்களுக்காகவும் சென்னைக்கு வரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் மட்டுமல்லாமல், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருக்கும் ஏ+ சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நுண்ணறிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், நுண்ணறிவு போலீசாரின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமலில் இருக்கும் தடை உத்தரவை மீறி இவர்கள் மூன்று பேரில் யாராவது சென்னைக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரில், நெடுங்குன்றம் சூர்யா மீது 8 கொலை வழக்குகள் உள்ளிட்ட சுமார் 200 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்ததாகவும், அவருக்கு பட்டியல் அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், லெனின் மற்றும் ராக்கெட் ராஜா ஆகியோர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Trending News

Latest News

You May Like