கோடிக்கணக்கில் சுருட்டிய முள்படுக்கை சாமியார்..! பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவர் ஒரு கம்பெனியில் மேலாளராகவும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அதே ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக குறி சொல்லியும் வந்துள்ளார்.
ஏற்கனவே அந்த கோவிலில் பூசாரியாக இருந்த முருகன் என்பவர் பால சுப்பிரமணியனை வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஊர்மக்களிடம் பணம் வசூலித்து அதே ஊரில் மற்றொரு அன்னாவி நாதன் என்ற கோவில் கட்டி குறி சொல்லி வந்தாராம். குறி கேட்க வருபவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக மாற்றி தருவேன் என்று கூறி பணத்தை வாங்கி மோசடியும் செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (வயது 42) என்பவர் சாமி அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் பால சுப்பிரமணியன் அறிமுகம் ஆகி இருக்கிறார். அப்போது தான் அருள்வாக்கு கூறுவதாகவும் புங்கவர் நத்தத்தில் உள்ள கோவிலில் விஷேஷ பூஜை செய்து பணத்தை இருமடங்காக கொடுத்து உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய லிங்கராஜ், போலி சாமியார் பால சுப்பிரமணியனிடம் சிறப்பு பூஜை செய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சம் கொடுத்து இருக்கிறார். இதேபோல லிங்கராஜின் நண்பர் ஆனந்தகுமார் என்பவரும் ரூ. 29 லட்சம் பணத்தை பால சுப்பிரமணியத்திடம் கொடுத்து இருக்கிறார். பின்னர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை லிங்கராஜ் செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அனைவரும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலி சாமியாரின் ஊருக்கு லிங்கராஜ் சென்றுள்ளார். அப்போதுதான் பால சுப்பிரமணியன் பலரிடம் ஏமாற்றி பணம் சுருட்டியது தெரியவந்து இருக்கிறது. பால சுப்பிரமணியனின் மகன் ஐயாத்துரை தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். ஏராளமானவர்களிடம் மோசடி செய்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய போலி சாமியாருக்கு உள்ளூரில் 19 ஏக்கர் நிலம் மற்றும் 30 லட்சம் மதிப்பில் வீடு உள்ளதாம்.ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்துள்ள போலி சாமியார் சுப்பிரமணியன், விருதுநகரில் உள்ள ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படுகிறது. அதே பகுதியில் 11 வீடுகளை கட்டியுள்ளதும் இந்த வீடுகளை அந்த பெண்ணே பராமரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. பணத்தை ஏமாந்தவர்கள் காவல் துறையில் புகாரளித்தும் போலீசார் பால சுப்பிரமணியனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, போலி சாமியாரையும் அவரது மகனையும் ஓசூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தன்னை சாமியார் என நம்பவைக்க முள்படுக்கையில் குதித்து குறி சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தாராம் பால சுப்பிரமணியன். பல பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.