உச்ச நீதிமன்றம் கிடுக்குப்பிடி! தமிழக அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் எந்த முடிவு எடுக்காமல் இருப்பது ஏன் ?
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது.குறிப்பாக மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இல்லையெனில் குடியரசு தலைவருக்கு அனுப்பி விடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த தமிழக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் அதிரடியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விசாரணையின் போது, 12 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்ன? 2 மசோதாக்களை ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஏன் மறுத்தார்? இதுபற்றி விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதற்கிடையில் ஆளுநர் தரப்பில் ஆஜராகிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி மட்டுமே வைத்தார். அதை திருப்பி அனுப்பவில்லை. ஆனால் தமிழக அரசு திருப்பிய அனுப்பி விட்டதாக தவறாக நினைத்து கொண்டு, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அதன் காரணமாகவே அந்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் என வாதாடினார்.
ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் குறிப்பிடுகையில், மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக மட்டுமே முடிவு எடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
.png)