மாணவர்கள் திடீர் சாலை மறியல்.. சக மாணவர் ரத்த வாந்தி எடுத்து பலியானதால் மாணவர்கள் போராட்டம்..!

சென்னை கானத்தூரில் கிழக்கு கடற்சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏரளமான மாணவர்கள் பிஇ, பிடெக், பிஎஸ்சி உள்பட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். கடல்வழி தொடர்பு மற்றும் கடல்வழிப் பணி ஆகியவை பாடங்களாக உள்ளன. கடல் சார்ந்த வேலைகளில் பணிபுரிய வேண்டி இந்த பல்கலைக்கழகத்தில் பலரும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகம் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்ற கல்லூரி மாணவன் இந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பிஇ 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த பிரசாந்த் இன்று அதிகாலை, ரத்த வாந்தி எடுத்ததாக சக மாணவர்கள் கூறினர்.
இதையடுத்து சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். உடனடியாக மாணவர் பிரசாந்த், கானத்தூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாணவன் பிரசாந்த் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவர் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து இறந்தது எப்படி என்பது தெரியவில்லை. அவரது இறப்பை தாங்க முடியாத சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் டூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர் பிரசாந்த்துக்கு ஓய்வு கொடுக்காததால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே நேற்று அதிகாலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இந்த சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், புருஷோத்தமனை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.