பிரபல தியேட்டர் மேற்கூரை சரிந்து விழுந்தது..அலறி அடித்து ஓடிய ரசிகர்கள்..!

சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. ஆவடி, பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. திடீர் சூறைக்காற்றால் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் நொறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு திரையரங்கில் மழையின் காரணமாக மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் தியேட்டருக்குள் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பூந்தமல்லியில் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அருகில் கல்லூரிகள் அதிகம் இருப்பதனாலும், தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதனாலும் எப்போதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே இந்த திரையரங்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரையரங்கில் மொத்தம் 5 ஸ்கிரீன்கள் உள்ளன. இந்த திரையரங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தியேட்டரின் முன்பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கும் இடம் உள்ளது. புதுப்படம் திரைக்கு வரும் போது கொண்டாட்டங்கள் இந்த தியேட்டரில் நடைபெறும். இந்த நிலையில் தான் இன்று பெய்த திடீர் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு தாக்குப்பிடிக்காமல் அந்த திரையரங்கின் முன்பகுதி சரிந்து விழுந்துள்ளது. யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். தற்போது அந்த தியேட்டர் அருகில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.