1. Home
  2. தமிழ்நாடு

பிரதமரின் அடுத்த மூவ்..! வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!

1

சீக்கியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக எந்நேரமும் கத்தி வைத்திருப்பதற்கும், இராணுவம், காவல் துறையில் பணிபுரிந்தாலும்,பணி விதிகளுக்கு மாறாகத் தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் தனிச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இஸ்லாமியர் பின்பற்றும் ஷரியத் சட்டமே, 1937ம் ஆண்டு முஸ்லீம் தனிநபர் சட்டமானது.

இப்படி சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது, நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே , அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வக்பு சட்டத்திருத்த மசோதா நாடு முழுவதும் ஏற்படுத்திய சலசலப்புகள் இன்னும் ஓயாத நிலையில், அடுத்ததாக பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது மத்திய பாஜக அரசு.


இதனை உறுதி செய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஹரியாணாவில் அம்பேத்கரின் பிறந்தநாள் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி , “உத்தரகாண்டில் உள்ள இரட்டை இயந்திர அரசாங்கம் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது, அதை நான் மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று அழைக்கிறேன், ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. உத்தரகாண்டில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதச்சார்பற்ற சிவில் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் அதிரடியாக செயல்படுத்தப்பட்டது" என்று பிரதமர் கூறினார்.


அந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சீரான சிவில் சட்டத்தை உறுதி செய்வதற்கான மாநிலத்தின் முயற்சியை கோடிட்டுக் காட்டும் அரசியலமைப்பின் 44வது பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது" என்று அவர் கூறியிருந்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கடந்த ஜனவரி மாதம் உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் 23-வது சட்ட ஆணைய குழுவின் ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்  பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதைச் சட்டமாக நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்,பொது சிவில் சட்டம் குறித்தும் தெரிவித்திருந்தார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சட்டங்கள் மதவாதம் சார்ந்ததாக இருக்கின்றன என்று பெரும்பான்மையான மக்கள் நம்புவதாகக் கூறிய பிரதமர் மோடி, நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்கள் மத ரீதியாக நாட்டைப் பிளவு படுத்துகின்றன என்றும் கூறியிருந்தார்.

எனவே, மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது இந்தியர்களின் கடமை என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் நடந்தது. நிறைவு நாளில்,  பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி,  நாட்டில் மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சூழலில், விடுதலைக்குப் பின் நாட்டின் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. தனது மூன்றாவது ஆட்சிக்காலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்த பிரதமர் மோடி, வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

வக்ஃப் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த நிலையில், பிரதமர் மோடி, அடுத்ததாக பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.  கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஹரியானாவில் அம்பேத்கார் பிறந்தநாள் பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டம் கூறும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பதையே தான் மதச் சார்பற்ற சிவில் சட்டம் என்று குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதனைக் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அதிரடியாக பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, 23வது சட்ட ஆணையத்துக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. ​​7 மாதங்களுக்குப் பிறகு, இப்போது மத்திய அரசு,ஆணையத்தின்  தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

23வது சட்ட ஆணையத்தின் தலைவராக  ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் மற்றும் பேராசிரியர் டி.பி. வீரம்  இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

வரும் வாரங்களில் பல்வேறு சமூக மற்றும் மதக் குழுக்களுடன் ஆணையம் ஆலோசனைகளைப் பெறத்   தொடங்கும் என்றும், பொது சிவில் சட்டத்தின் நன்மைகள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடங்க அரசு  திட்டமிட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

Trending News

Latest News

You May Like