கருத்துக்கணிப்பு வெளியானது..! அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸூக்கு அதிக வாய்ப்பு..!
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த 28-ம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். எனவே இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர்.
இந்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என். கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும், 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர். அதே சமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன் மூலம் தெரியவருகிறது.