"திமுக செய்யும் அரசியல் எடுபடாது" எடப்பாடி பழனிசாமி பேட்டி !
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் தமிழகத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமா ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக அரசு ஏராளமான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. மேலும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதரல் தராமல் தாமதித்து வருவதால், 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி,அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமா ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.