மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்று முதல் பெட்ரோல் பங்குகளில் UPI ஏற்கப்படாது..!

மே 10ம் தேதி முதல் யுபிஐ மற்றும் கார்டு பேமெண்டுகளை ஏற்கப்போவது இல்லை என்று மகாராஷ்டிராவின் நாக்பூர் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிரா தானே என நினைக்க வேண்டாம். இதனால் நமக்கு என்ன சிக்கல் என்பதைத் தெரிந்து கொள்ள முழுமையாகப் படியுங்கள். அதாவது அதிகரிக்கும் சைபர் மோசடிகள் மற்றும் வங்கிக் கணக்கு கட்டுப்பாடுகள் காரணமாகப் பல பெட்ரோல் பங்குகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்தப் போராட்டத்தைப் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விதர்பா பெட்ரோலியம் டீலர் அசோசியேஷன் தலைவர் அமித் குப்தா கூறுகையில், "சைபர் கிரிமினல்கள் தொடர்ச்சியாக மோசடி செய்கிறார்கள். அதாவது அவர்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு யுபிஐ மூலம் பணம் அனுப்புகிறார்கள். பிறகு மோசடி பரிவர்த்தனை எனத் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்துவிடுகிறார்கள். இதனால் எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. எங்கள் பணத்தையே எங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது" என்றார்.
இதுபோல மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட யுபிஐ ஐடிகள், டெபிட்/ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடிகள் செய்வதாகவும் கூறுகிறார்கள். இதன் காரணமாக முதலில் நாக்பூரில் மட்டும் யுபிஐ, டெபிட்/ கிரெடிட் பேமெண்டுகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்தார்கள். இதற்கிடையே மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கும் நிலையில், மும்பை உட்பட அங்குப் பல மாவட்டங்களில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.