அழைப்பிதழ் கொடுத்த பாமக.. சிரித்த முகத்துடன் பெற்றுக்கொண்ட திருமாவளவன்!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த பாமகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் வந்து பங்கேற்க வேண்டும் என அக்கட்சியை நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணியும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், பாமகவினர் அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தனர். அப்போது வன்னியர் சங்க மாநாட்டிற்கு வருமாறு திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தனர்.மேலும் அவருக்கு சால்வை அணிவித்து அழைப்பிதழையும் வழங்கினர். திருமாவளவன் சிரித்த முகத்தோடு அழைப்பிதழை பெற்றுக் கொண்டு மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
வட தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து இருப்பதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.