1. Home
  2. தமிழ்நாடு

இன்று 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்..!

1

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடங்கிய இன்டியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

இந்தநிலையில் இருமுனைப் போட்டி உறுதியானதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி தேர்தலானது தேர்தல் கல்லூரி வாக்காளர்களால் நடத்தப்படுகிறது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களே வாக்காளர்களாக இருப்பார்கள்.

தேர்தல் கமிஷனின் அறிவிப்புபடி பாராளுமன்ற இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 788 ஆகும். தற்போது மாநிலங்களவையின் 245 உறுப்பினர் இடங்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன. மக்களவையின் 543 இடங்களில் ஒரு இடம் காலியாக இருக்கிறது. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது.

இதில் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுடன் கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் சேர்த்தால் 450-க்கு மேல் வரும். இதனால் வெற்றி வாய்ப்பு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் அடங்கிய இன்டியா கூட்டணி, இந்த தேர்தல் ‘‘சித்தாந்த போர்’’ என குறிப்பிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. விடிந்தால் தேர்தல் என்ற நிலை இருப்பதால் இரு அணியினரும் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் முழு வீச்சாக உள்ளனர்.

ஆளும் பா.ஜனதா கட்சி தனது எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சிக் கூட்டத்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். ஒரு சாதாரண தொண்டரைப் போல கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி போன்றவை பற்றி பேசப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதுபோல இன்டியா கூட்டணியும், கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு வாக்களிப்பு ஒத்திகை பயிற்சியை பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு நடத்தியது. முன்னதாக வாக்களிப்பு குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  இன்று நடைபெறவுள்ள தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் பதிவான வாக்குக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று மாலையே வெளியாகிறது.

Trending News

Latest News

You May Like