திமுக ஆட்சிக்கு இன்னும் 1 வருடம் தான் இருக்கு... 13 அமாவாசைகள் தான் - எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக சார்பில் சென்னையில் உள்ள கண்ணகி நகரில் எம்ஜிஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"இன்றைக்கு ஸ்டாலின் பேச்சை குறைத்துக்கொண்டார். இதற்கு முன்னர், 10 ஆண்டுகாலமாக அதிமுக எதையும் செய்யவில்லை என்று விமர்சித்து வந்திருந்தார். தற்போது 4 ஆண்டு காலம் உருண்டோடிவிட்டது. இந்த ஆட்சிக்கு இன்னும் 1 வருடம் இருக்கிறது. 13 அமாவாசைகள்தான் இருக்கிறது.
இந்த 4 ஆண்டு காலத்தில் என்னதான் செய்தார்? செய்திருக்கிறார். அவரது மகனை துணை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார். அதுதான் அவர் படைத்த சாதனை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உள்ளார். போட்டோ ஷூட் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார். ஊடகங்களில் உண்மை செய்திகளை வெளியிட்டால் திமுக காணாமல் போய்விடும். நாட்டில் நடக்கும் சம்பவங்களையும் பிரச்சனைகளையும் உண்மை செய்திகளாக வெளியிட்டால் திமுக இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் இதுவரை 20% அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என முதல்வர் எப்போதும் சொல்கிறார். ஆனால் அதனையும் அதிமுக சார்பில் அதனை வாதாடி போராடி தான் வாங்கி கொடுக்கப்பட்டது.
மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட 2500 ரூபாய் 5000 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்பட்டது. மானிய விலையில் நாட்டுப் படகு வழங்கப்பட்டது. மீன்பிடி குறைந்த காலத்தில் 5 லட்சம் 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. உதயநிதியைத் துணை முதல்வராக்கியது தான் திமுக அரசின் சாதனையாகும். கொரோனா காலத்தை அதிமுக ஆட்சி சீறிய முறையில் கையாண்டது. ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைப்பது இல்லை. அல்வாதான் கொடுக்கிறது திமுக அரசு. தமிழகம் கல்வியில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம் அதிமுகதான். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தான் அதிக மருத்துவ கல்லூரிகளும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தின் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன" என்று கூறியுள்ளார்.