70 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்... இந்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/89b4f6724c96913212ddf2bc95125845.webp?width=836&height=470&resizemode=4)
வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4-ம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.
அதன்பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூர் – மசூலிப்பட்டணம் இடையே 5-ம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும். அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 3-ம் தேதி சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். எனவே 4,5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவித்தார்.