1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களை அமலாக்க துறை மூலம் மிரட்டுகிறது மத்திய அரசு..!

1

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகளை - வாக்குறுதிகளை எல்லாம் எந்த அளவிற்குத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அது போல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.

காரணம், இன்றைக்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி. ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோதப் போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது. 

அண்மையில்கூட ஒரு சட்டத்தை கொண்டு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டம். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கி விட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

ஏற்கனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சி.பி.ஐ., ஐ.டி., ஈ.டி., என்ற அந்தத் துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கேகூட இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறபோது, இது குடும்பக் கட்சியாக, எங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக நடக்கிறது என்றெல்லாம் பெருமையோடு சொன்னார்கள். இதை கேட்டால், பிரதமருக்கு கோபம்கூட வந்து விடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் சென்று, நம் பிரதமர் என்ன பேசியிருக்கிறார் என்றால், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள். கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அடுத்த நாளே, இதே மண்டபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறபோது, இது குடும்பக் கட்சிதான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட - கருணாநிதியால் வளர்க்கப்பட்ட தி.மு.க. என்பது குடும்பக் கட்சிதான். இன்னும் சொல்ல போனால், தமிழகமே தி.மு.க.வின் கட்சிதான். தமிழகமே கருணாநிதி குடும்பம்தான் என்று அன்றைக்கே நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன்.

எனவே அப்படிப்பட்ட குடும்பத்தில் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிற நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like