400 இடங்கள் கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை - முதல்வர் ஸ்டாலின்!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f17d92eb958eb50b35b5cd85de7157a5.webp?width=836&height=470&resizemode=4)
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.
இந்த சூழலில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அளவில் தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று கூறி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக பிம்பத்தை கட்டமைத்தது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கூட கிடைக்க முடியாத அளவிற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் உளவியல் தாக்குதலை பாஜக நிகழ்த்தியது. ஆனால், அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம், வெறுப்பு பரப்புரை மூலம் மக்களை பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்புதான் இந்தியா கூட்டணியின் வெற்றி.
பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், என அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தானது, வரலாற்று சிறப்பு மிக்கது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக முன்னெடுக்கும். திமுகவின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்” என்று தெரிவித்தார்.