மீண்டும் சர்ச்சையில் பாஜக... இடது கையில் எழுதும் பழக்கம் கொண்டவராக திருவள்ளுவரை சித்தரித்ததால் பரபரப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ba5970942a936a85ec29faee0052118e.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளுக்கும் இன்று முதல் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் 6 மாதங்கள் பாதயாத்திரை செல்ல உள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலையின் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க இருக்கிறார். இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை ஓய்வெடுப்பதற்காக பல வசதிகளை கொண்ட ஏசி வசதி கொண்ட சொகுசு பேருந்து தயாராகியுள்ளது. காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருவள்ளுவரின் வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஓலைச்சுவடியும் இருக்கும். 2019 ஆண்டு பாஜக வெளியிட்ட வள்ளுவரின் புகைப்படத்திலும் அப்படி தான் இருக்கும். ஆனால் தற்போது போட்டோஷாப்பில் வடிவமைத்த பாஜகவினர், திருவள்ளுவரின் புகைப்படத்தை அப்படியே ’பிளிப்’ செய்து பேருந்தில் ஒட்டியுள்ளனர். பிளிப் என்பது, புகைப்படத்தினை தலைகீழாக மாற்றுவதற்கு பயன்படும். அப்படி செய்யும் போது, வலது பக்கம் இடதாகவோ அல்லது மேல் பாகம் கீழாகவோ மாறும்.
இங்கு பாஜகவினர் திருவள்ளுவரையே பிளிப் செய்ததால், அவரது வலது கையில் ஓலைச்சுவடியும், இடது கையில் எழுத்தாணியும் என மாறியுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவரின் உடையை மாற்றி சர்ச்சையில் சிக்கிய பாஜக, தற்போது அவரை இடது கையில் எழுதும் பழக்கம் கொண்டவராக சித்தரித்துள்ளது சமூகவலைதளங்களில் மேலும் அதிருப்தியை எழுப்பியுள்ளது. வலதுசாரியாக இருந்த வள்ளுவரை இடதுசாரியாக மாற்றியுள்ளது பாஜக என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.
மேலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் ஓய்வெடுப்பதற்காக தங்கிய பேருந்தை ஆடம்பரம் என பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.
இந்தநிலையில், தற்போது பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, தொண்டர்களை சந்திப்பதற்காக மேற்கூரை, ஏசி வசதிக்கொண்ட சொகுசு பேருந்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.