தடைக்காலம் இன்றுடன் முடிகிறது..! தயாராகும் மீன்பிடி படகுகள்..!
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. கட்டுமரங்களில் கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் செல்லும் மீனவர்கள் அங்கு கிடைக்கும் மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிறது. இன்று இரவு முதல் மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளனர். இதையடுத்து விசைப்படகுகளை தயார்படுத்தும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்ப உள்ளதால், ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக கடற்கரையோட மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் படகுகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாததால் பொருளாதார நெருக்கடியில் இருந்த மீனவர்கள், நாளை முதல் போதுமான அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்வதால் நாளை முதல் மீன்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.