+1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது..!
பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று (14-ந்தேதி) வெளியாகிறது.
பிளஸ்-1 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடை பெற்றது. 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாணவர்களும் 4,945 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுத் துறை வெளியிடுகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங் கள் மற்றும் அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.