அந்த மனசு தான் சார் கடவுள்..! பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்..!

தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுக்கு ஒரு முறை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று பிறபகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதலே மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வந்து நீட் தேர்வு நடக்கும் மையங்களின் வளாகங்களில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11.30 மணி முதல் தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி அணிந்திருந்த ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து, மீண்டும் அழைத்து வந்து நீட் தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
இதையடுத்து, அந்த மாணவி, நீட் தேர்வு எழுத, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். திடீரென தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவி நிலைகுலைந்து போன நிலையில், உடனடியாக பெண் காவலர் அந்த மாணவியை அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கிருந்தவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.