1. Home
  2. தமிழ்நாடு

அந்த மனசு தான் சார் கடவுள்..! தவறவிட்ட 25 சவரன் நகைகளை பத்திரமாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்..!

1

மதுரை சுந்தரராஜபுரம் நியூ ரைஸ்மில் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கம் என்பவர், தனது மகளின் தை மாத திருமணத்திற்காகச் சுமார் 25 பவுன் தங்க நகைகளை வீட்டில் சேமித்து வைத்திருந்தார். இந்த நகைகளை அவர் சிறிய தலையணைக்குள் மறைத்து வைத்திருந்தார்.

வீட்டைச் சுத்தம் செய்யும் பணியின்போது, பழைய துணிகளுடன் அந்தத் தலையணையையும் தெரியாமல் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டனர். சிறிது நேரம் கழித்து நகை நினைவுக்கு வந்தபோது, குப்பைத் தொட்டியைத் தேடியும் கிடைக்கவில்லை. பதற்றமடைந்த தங்கம் உடனடியாகத் துப்புரவு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

உடனடியாகச் செயல்பட்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன், தூய்மைப் பணியில் இருந்த பணியாளர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். அப்போது, தூய்மைப் பணியாளர் மீனாட்சி என்பவர், குப்பைக் கிடங்கில் தேடிக் கொண்டிருந்த போது, அந்தத் தலையணை கண்ணில் பட்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் 25 பவுன் நகைகள் இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.

உடனடியாக மீனாட்சி, மேற்பார்வையாளர் மருதுபாண்டியனுடன் சேர்ந்து, நகை உரிமையாளரான விவசாயி தங்கத்திடம் நகைகளை பத்திரமாக ஒப்படைத்தார். வாழ்நாள் சேமிப்பாகவும், மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையும் மீண்டும் கைக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் தங்கம் கண்கலங்கி, மீனாட்சிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இந்தப் பெண் பணியாளரின் நேர்மையான செயலுக்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நேர்மையும் மனிதநேயமும் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஓர் உதாரணமாக இந்தச் சம்பவம் மதுரையில் பேசுபொருளாகி உள்ளது. நேர்மையுடன் நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி மற்றும் மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like