வருகிறது தை அமாவாசை : 7 தலைமுறை பாவம் நீங்க இந்த 3 பொருட்களை தானம் செய்யுங்க..!

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. இது பெருமாள் வழிபாட்டிற்குரிய புதன்கிழமையில், பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும். இந்த நாளில் மூன்று முக்கிய பொருட்களை தானம் அளிப்பது மிக மிக சிறந்தது ஆகும். தை அமாவாசை அன்று எந்தெந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும், யாருக்கு தானம் அளிக்க வேண்டும், எந்த மாதிரியான பொருட்களை தானம் அளித்தால் நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் அளிப்பதுடன், தானம் வழங்குவது மிக மிக முக்கியமானதாகும். அதிலும் அந்தணர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்பார்கள். எல்லா அந்தர்ணர்களுக்கும் தானம் அளிக்கக் கூடாது. முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்கள் செய்து வைக்கும் அந்தணர்களுக்கு மட்டுமே தானம் அளிக்க வேண்டும். அமாவாசை என்பது சந்திரனுக்குரிய தினம் என்பதால் சந்திரனுக்குரிய பொருட்களான வெள்ளை நிற வஸ்திரங்கள், பச்சரிசி, பச்சை காய்கறிகள் ஆகிய மூன்று பொருட்களை தானம் அளிப்பது சிறப்பு. தர்ப்பண காரியங்கள் செய்யும் அந்தணர்களுக்கு இந்த 3 பொருட்களை தானம் அளித்தால் மட்டுமே அது முன்னோர்களை சென்று சேரும் என்பது நம்பிக்கை.
இது தவிர சனிகாரகாத்துவம் உடையவர்களுக்கும் தானம் அளிப்பது சிறந்தது. அதாவது மாற்று திறன் கொண்டவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவி செய்வது சிறப்பு. சாலையோரங்களில் யாசகம் வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உணவு அளிப்பது, சாலையோரம் வசிப்பவர்களுக்கு போர்வை வாங்கிக் கொடுப்பது நல்லது. குறிப்பாக கருப்பு நிற கம்பளி போர்வை வாங்கிக் கொடுப்பது சனியின் பிடியில் இருந்து விடுபடுவதற்கும், பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்றதாக இருக்கும்.
தை அமாவாசை அன்று இவற்றை செய்து முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை படைத்து வழிபடுவது பித்ருக்களின் ஆசியை பெற்றுத் தரும். அதனால் நம்முடைய பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். தை அமாவாசையில் காலையிலேயே முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து விட வேண்டும். இது அவர்களை திருப்தி அடைய செய்யும் என்பதால் நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி, நமக்கு முந்தைய தலைமுறையில் இருந்தவர்கள் செய்த பாவங்கள், பித்ரு காரியங்கள் செய்யாமல் விட்ட குறைகள், தவறுகள் ஆகியன நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.