இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவிற்கு நியாயமற்றது..!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தால், அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் எந்த நாட்டிற்கும் பதிலுக்கு வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் அரசு வகுத்து வருகிறது. சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது, இந்தியாவில் மின்சார வாகனங்கள்மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பது குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன், சீனா ஹானிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், “உலகில் உள்ள அனைத்து நாடுகளும், வரி விதிப்பதன் மூலம் நம்மைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் ஒரு காரை விற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது,” என்று கூறினார்.
டிரம்ப் கூறியதாவது, “நான் பிரதமர் மோடியிடம், ‘நீங்கள் எங்களிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த வரியை விதிக்கிறீர்களோ, அதே வரியை நாங்களும் விதிப்போம்’ என்று தெரிவித்தேன்.” அவர் மேலும், “மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால், அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது” எனக் கூறினார்.
அதே நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறியதாவது, “இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும், இது உள்ளூர் உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸுக்கு நன்மை தருவதாகவும், இது நியாயமற்றது” எனக் குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம், இந்திய அரசாங்கம் புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, கார் உற்பத்தியாளர்கள் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால், இறக்குமதி வரி 15% ஆக இருக்கும்.