பட்டப்பகலில் பயங்கரம்.. குழந்தைகள் கண்முன்னே இளம் பெண் குத்திக்கொலை..!
தலைநகர் டெல்லியில், இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் கண்முன்னே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: ‘தென் மேற்கு டெல்லி சாகர்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று பகல் போன் அழைப்பு ஒன்று வந்தது.
அதில், பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் 24 வயது பெண்ணை துரத்தி வருகிறார்.
அவர் குழந்தைகளுடன் ஓடுகிறார். விரட்டி வந்த நபர் குழந்தைகள் கண்முன்னே அந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடுகிறார்.
இது குறித்து விசாரித்ததில், கத்தியால் குத்திய நபர் அந்த பெண்ணின் வீட்டின் அருகில் வசிப்பவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த பெண் ஆர்த்தி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது, தலைமறைவாக உள்ள குற்றவாளியை அடையாளம் காணவும், கண்டுபிடித்து கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.