குன்னூரில் அதிபயங்கரம் : இளைஞரை கொம்பால் குத்தி தூக்கி வீசிய காட்டு எருது !
![குன்னூரில் அதிபயங்கரம் : இளைஞரை கொம்பால் குத்தி தூக்கி வீசிய காட்டு எருது !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/ba0f53a0d6a39aa282d7ff4e02bf3f42.gif?width=836&height=470&resizemode=4)
குன்னூர் வனப்பகுதி அருகே இளைஞர் ரஞ்சித் என்பவரை காட்டு எருது ஒன்று, தனது கொம்பில் குத்தி தூக்கி வீசியதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டு எருதுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .இந்த நிலையில் குன்னுார் அருகே அட்டடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (20). இவர் தனது வழக்கம் போல் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது, அருகே உள்ள டீ தோட்டத்தின் மறைவில் நின்றிருந்த காட்டு எருது ஒன்று இவரை நோக்கி பாய்ந்து வந்து வயிற்று பகுதியில் குத்தி தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் , மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி குன்னுார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் சரவணன் மற்றும் குன்னூர் கோட்ட வன அலுவலர் சசிக்குமார் உயிரிழந்த ரஞ்சித் குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி 4 லட்ச ரூபாயில் முன் பணமாக ரூபாய் .50,000/- வழங்கினார்.
இந்த நிலையில், காட்டு எருதுகள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த காட்டு எருதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.