அதிகரிக்கும் பதற்றம் : ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர் கைது..!

ஜம்மு காஷ்மீரில் பெஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, ஏப்ரல் 23 அன்று, பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பஞ்சாப் எல்லையில் கைது செய்தனர். இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும், எதிர்ப்பு தெரிவித்தும், பாகிஸ்தான் இதுவரை அந்த வீரரை திருப்பி அனுப்பவில்லை. பூர்ணம் குமார், பிஎஸ்எஃப் 182வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் பஞ்சாபின் பெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் நடந்தது. அங்கு வீரர் பூர்ணம் குமார் விவசாயிகளை அவர்களின் விளைநிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அறிக்கையின்படி, அவர் எல்லை தாண்டி ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிஎஸ்எஃப் வீரர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சனிக்கிழமை, பிஎஸ்எஃப் ராஜஸ்தான் எல்லையில் ஒரு பாகிஸ்தான் ரேஞ்சரை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்திய வீரரை மீண்டும் அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.