பெட்ரோல் ஊற்றி கோயில் பூசாரி உயிரோடு எரித்து கொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம் !

ராஜஸ்தானில் கோயில் நிலங்களை பூசாரிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நிர்வகிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனடிப்படையில் கரோலி பகுதியில் உள்ள ராதா கிருஷ்ணன் கோவிலின் பூசாரி பாபு லால் வைஷ்னவ் என்பவர், கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலத்தையொட்டிய இடத்தில் அவர் வீடு ஒன்று கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு அந்த இடத்தை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சமதளப்படுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நிலம் தங்களுடையது என கூறி அங்கு திரண்ட ஒரு கும்பல், பூசாரி பாபு லால் வைஷ்னவுடன் பிரச்னையில் ஈடுபட்டனர். பிரச்னையில் ஈடுபட்டவர்கள் அங்கு உயர் சாதியினர் என கூறப்படுகிறது.
பின்னர் இந்த விவகாரம் ஊர் பெரியவர்களிடம் செல்லவே ராஜஸ்தானில் உள்ள சட்டப்படி தான் பூசாரி இடத்தை பராமரித்து வருவதாக பூசாரிக்கு ஆதரவாக பேசியுள்ளனர். ஊர் பஞ்சாயத்து பேசியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் பூசாரியின் இடம் என கூறப்படும் இடத்தில் எதிர்தரப்பினர் குடிசை ஒன்றை அமைத்தனர். பூசாரி பயிர் சாகுபடி செய்திருந்த இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்து எரித்ததுடன் அங்கு தடுக்க வந்த பூசாரி மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும் ஆத்திரத்தில் பூசாரி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடினர்.
இதனை கண்ட அப்பகுதியினர் தீக்காயங்களுடன் போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் பூசாரி பாபு லால் வைஷ்னவ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரிடம் பூசாரி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கைல்சா மீனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது பூசாரி தீயிட்டு கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
newstm.in