தெலங்கானா டூ சத்தீஸ்கருக்கு நடந்தே சென்ற சிறுமி.. ஊருக்கு அருகே நேர்ந்த பரிதாபம்..!!
தெலங்கானாவிலிருந்து தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்குப் பயணம் மேற்கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, போக்குவரத்துகள் முழுமையாக முடக்கப்பட்டு, மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. வேறு மாநிலங்களுக்குக் கூலித் தொழிலாளர்களாகச் சென்றவர்கள் வாழ வழியின்றி சைக்கிள், பைக், கால்நடையாக நடந்து என சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திலிருந்து தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள பீஜப்பூருக்கு 12 வயது சிறுமி அவரது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக இவர் 150 கி. மீட்டர் நடந்தே பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவரது குடும்பம் தெலுங்கானாவிலுள்ள மிளகாய் தோட்டங்களில் வேலை செய்து வந்துள்ளது. ஊரடங்குப் போடப்பட்டதால் வேலையின்றி இவர்கள் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தங்களின் சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்திற்கு மொத்தம் 11 பேருடன் இந்தச் சிறுமியும் சேர்ந்து நடக்கத் தொடங்கியுள்ளார். இவர்கள் நெடுஞ்சாலை வழியே பயணிக்காமல் குறுக்கு வழியில் செல்வதற்காகக் காட்டு வழிப்பாதைகளில் நடக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் குழுவில் பயணித்த ஜாம்லோ மக்தாம் என்கிற 12 வயது சிறுமி இவரது ஊருக்குச் சென்று சேருவதற்கு முன்பே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். கடைசியாக அவரது வீட்டிற்குச் செல்ல இன்னும் 14 கி.மீட்டர் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன்பின்பு சிறுமியின் உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அந்தோரம் மட்கம், தெலுங்கானாவில் இரண்டு மாதங்களாக பணிபுரிந்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் அவர், என் மகள் எங்களுடன் மொத்தம் மூன்று நாட்கள் நடந்து வந்தார். இடையில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இறந்துபோன சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ .1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in