புதிய யூடியூப் சேனலைத் தொடங்கிய டிடிஎஃப் வாசன்!

சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்.அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.
இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு அவரது லைசென்ஸையும் ரத்து செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் டிடிஎஃப் வாசன்.
கடந்த நவம்பர் 1-ம் தேதி மூன்று வாரங்களுக்கு தினமும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்திடம் காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக, யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும். இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது அவரது யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரது யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்கள் இடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டிடிஎஃப் வாசன், தனது யூடியூப் சேனலை முடக்க பார்க்கிறார்கள். அது கடுமையான மனவேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த சேனலை முடக்கினால் என்ன, புதிய சேனலைத் தொடங்கியுள்ளேன் எனக் கூறினார்.
அதாவது இம்மோர்டல் டிடிஎஃப் வாசன் என்ற பெயரில் அந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது. அந்த சேனலின் டேக் லைனாக, 'வீழ்ந்தாலும் விண்ணைத் தொடுவோம்' என வைக்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த சேனலுக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.