செல்போனை போலீசில் ஒப்படைத்த டிடிஎஃப்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/988543a9dc325c873f6e3994a8f7a7e3.webp?width=836&height=470&resizemode=4)
யூடியூபரும், பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த மே 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் வாசன். இதையடுத்து மதுரை அண்ணா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் டிடிஎஃப் வாசன். அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஃஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார் ஓட்டுநர் உரிமம் பெற டிடிஎஃப் வாசன் LLR பெற்றுள்ள நிலையில் அதனை வைத்து தேசிய நெடுச்சாலையில் வாகனத்தை இயக்கி உள்ளார் என வாதம் முன்வைக்கப்பட்டது.
காரை வேகமாக ஓட்டவில்லை என்றும் தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதாகவும் டிடிஎஃப் வாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி டிடிஎஃப் வாசனுக்கு, 10 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில் தற்போது ஜாமீனில் உள்ள டிடிஎஃப் வாசன் 10 நாட்களுக்கு மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பேரில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். மேலும், டிடிஎஃப் வாசன் தனது செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட வாசன் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்று (ஜூன் 5) ஒப்படைத்தார்.