டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! அதிகபட்சமாக ரூ.16,800 தீபாவளி போனஸ்..!
தீபாவளி வியாழ கிழமை வருகிறது. அடுத்த நாள் வெள்ளிக் கிழமை பணி நாள். அதற்கடுத்து இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்று வெள்ளிக் கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு பதிலாக நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. சூப்பர் வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.