முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த பிறந்தநாள் வேண்டுகோள் - தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

மார்ச் 1ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும், உரியப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், “பொதுவாக நான் பிறந்தநாளைப் பெரிய அளவில் ஆடம்பரமாக - ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழகக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள்.
இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாடு தன்னுடைய உயிர்ப் பிரச்சனையான மொழிப்போரையும் - தன்னுடைய உரிமைப் பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது.
இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது. இதைப் பார்த்த ஒன்றிய அரசு, இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை. அதேபோல், “தமிழ்நாட்டிற்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம்,” என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
நாம் கேட்பது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள்! நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்! அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.,வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” எனக் கூறியுள்ளார்.
ஒரே இலக்கு!
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!#FairDelimitationForTN pic.twitter.com/zQ1hMIHGzo